திருவொற்றியூர்: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(44), ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு சவாரிக்காக தண்டையார்பேட்டை சென்றுவிட்டு, அங்கிருந்து வீட்டிற்கு வந்தபோது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் ஆட்டோவை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது வைத்தியநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் தகர ஷீட்டுகள் காற்றில் பறந்து வந்து சுப்பிரமணி மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அப்போது பழைய வண்ணாரப்பேட்டை எம்சிம் கார்டன் 3வது தெருவைச் சேர்ந்த உணவு டெலிவரி நிறுவன ஊழியரான ராஜா(39) என்பவர் அங்குள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதற்காக நின்று கொண்டு இருந்தார். இதில் அவருடைய வலது தோள்பட்டையிலும் தகர ஷீட் வெட்டியது. இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.