ஸ்ட்ரெஸ்… டிப்ரசன்…

நன்றி குங்குமம் டாக்டர்

தடுக்க… தவிர்க்க!

நவீன வாழ்க்கைமுறை நமக்குத் தந்திருக்கும் பரிசுகள் அநேகம். அது போலவே அது உருவாக்கியிருக்கும் மோசமான விளைவுகளும் அதிகம். அதில் பிரதானமானவை ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரசன். இதனை மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் என்பார்கள் நிற்பதற்கு நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வில் எல்லோருக்குமே இலக்குகள் இருக்கின்றன. அதை முடித்தாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

குழந்தைகள் முதல் முதியோர் வரை இல்லத்தரசிகள் முதல் பணிபுரியும் பெண்கள் வரை, மாணவர்கள் முதல் நிறுவனத்தின் சி.இ.ஓ வரை எல்லோருமே ஏதாவது ஒன்றின் பின் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மாணவர்கள் என்றால் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பதட்டம், ஒரு பெரு முதலாளி என்றால் நம் நிறுவனம் முதல் நிலைக்கு வர வேண்டும் என்ற அழுத்தம்.

இப்படியான சூழலை எல்லோராலும் சமாளிக்க இயல்வதில்லை. இதனால், தனிமைப்படுதல், போதைப் பழக்கம், தற்கொலை என விபரீத எல்லை வரை செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரசனை தடுக்க என்னதான் வழி?

மன அழுத்தம் என்பது ஒரு நோய்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. மன அழுத்தம் என்பது ஒரு காரணி. அதனால் ஏற்படும் விளைவுதான் மனச்சோர்வு.

மன அழுத்தம் மூன்று காரணங்களால் ஏற்படுகிறது.

*உடல்ரீதியான காரணம் – பரம்பரை மரபணுக்கள் மூலமும் வரலாம்.
*தனிநபர் காரணம் – பொழுதுபோக்கு இல்லாதது, நண்பர்கள் இல்லாதது, ஆளுமை, தாங்க முடியாத சுமை , பிரச்சினைகளைக் கையாளத் தெரியாதது.
*சமூகக் காரணம் – பொருளாதாரம், எதிர்ப்பார்ப்பு பூர்த்தி செய்ய முடியாமை.

பொதுவாக மன அழுத்தம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. ஆண்கள் மன அழுத்தத்தில் இருந்தாலும் அவர்களுக்கு வடிகால்கள் உள்ளன. நண்பர்களிடம் பகிர்வது, தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்வது என தங்கள் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். பெண்கள் அப்படியல்ல. மனதுக்குள் போட்டு அவர்களைக் குழப்பிக்கொள்கிறார்கள்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

எதையோ பறிகொடுத்த மாதிரி இருப்பார்கள். எதிலும் முழு ஈடுபாடு காட்ட மாட்டார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும்.

மன அழுத்தத்தில் நல்ல மன அழுத்தம், கெட்ட மன அழுத்தம் என இரு வகைகள் உள்ளன. ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது. நம் பிரச்சினையை, குறையை இனம் கண்டுகொண்டு தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெற்றி பெற நல்ல மன அழுத்தம் உதவுகிறது.

மன அழுத்தம் தரும் வேகம் ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை
வெகுவாகப் பாதிக்கிறது. கெட்ட மன அழுத்தம் இருந்தால் எதிர்மறையாகவே தோன்றும். குறுகலான பார்வையுடனே சிந்திப்பார்கள். திறமையில்லை, படிக்க முடியவில்லை, நம்மால் சாதிக்க முடியாது என்று நெகட்டிவ் சிந்தனைகளிலேயே மூழ்கி இருப்பார்கள்.

அதிக எதிர்பார்ப்பும், தன் பிம்பம் உடையும் ஈகோவுமே மன அழுத்தத்திற்கான பொதுவான காரணங்கள். சின்ன சுடுசொல் கூறினாலும், திட்டினாலும் சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். முகநூலில் 5,000 நண்பர்கள் இருக்கலாம். ஆனால், ஆறுதல் கூற அர்த்தமுள்ள விஷயங்களைப் பகிர, உணர்வுகளைப் புரிந்துகொள்ள உண்மையான நண்பர்கள் ஒரு சிலர் கூட இருக்க மாட்டார்கள்.

இப்போதெல்லாம் நான்கு பேர் குழுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் செல்போனில் தனித்தனியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரம்மாண்டமானதுதான். ஆனால், அது பக்கத்தில் இருப்பவர்களை அந்நியப்படுத்தி இருக்கிறது. உரையாடுதல், தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்றவை உடனிருக்கும் நபர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளாததுதான் மன
அழுத்தத்துக்கான முக்கியமான காரணம்.

சென்ற தலைமுறையில் வாழ்க்கைத் தரம் வேறு மாதிரி இருந்தது. இந்த தலைமுறையில் கார், சொந்த வீடு உள்ளிட்ட வசதிகள் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், போட்டி மனப்பான்மையில் முதலிடம் வர வேண்டும் என்கிற அதீத அழுத்தமுமே மன அழுத்தத்துக்கான வாய்ப்பு வாசல்கள்.

10-ம் வகுப்பு முடித்த மாணவர் ஒருவர் கவுன்சிலிங் வந்தார். அவருக்கு கணிதத்தில் கற்றல் குறைபாடு இருந்தது. ஆனால், அந்த மாணவரின் பெற்றோர் அவரை ஐஐடியில் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தனர். இதனால் நம்மால் அது முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார். அவரிடம் கற்றல் குறைபாடு இருப்பதை அவரின் பெற்றோரிடம் புரிகிற வகையில் சொன்னேன். பின்பு கணிதப் பிரிவு எடுக்காமல் பிளஸ் 1, பிளஸ் 2-வில் உயிரியல் பாடம் எடுத்துப் படித்து தற்போது மகிழ்ச்சியாகப் படித்து வருகிறார்.
கணிதத்தில் கற்றல் குறைபாடு உடையவர்கள் தேர்வு எழுதும்போது கால்குலேட்டர் வைத்துக் கொள்ளலாம். டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு இருக்கும் மாணவர்கள் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதலாம்.

இதனால் மன அழுத்தத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. மீன் நன்றாக நீச்சலடிக்கலாம். ஆனால், அதை மரத்தில் ஏறச் சொல்ல முடியுமா? அப்படித்தான் மாணவர்களின் திறமை ஒரு பக்கம் இருக்க அவர்களை எல்லோரும் ஓடும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் ஓடி எல்லோரையும் முதலிடத்துக்கு வரச் சொல்கிறார்கள். இதனால் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டி, மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தத்தால் ஸ்டீராய்டு என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மூளையின் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும். இதனால்தான் எவ்வளவு பெரிய சாதனையாளர்களும் புத்திசாலிகளும் மன அழுத்தத்தால் சில முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கவனமின்மை, மறதி, தூக்கமின்மை, பசியின்மை ஆகியவை மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள்.

கிரிக்கெட்டில் 300 ரன்கள் எடுக்க வேண்டும். நம்மால் முடியும் என்று திட்டமிட்டு முயற்சி செய்தால் எடுக்கலாம். இது நல்ல மன அழுத்தம். பிரச்சினைகள் உருவாகும்போதுதான் சவாலாக எடுத்துக்கொண்டு சந்திக்க முடியும். அந்த சந்திப்பு சாதனையாக மாறும். நம்மால் முடியாது என்று நினைத்தால் அது தோல்வியில் முடியும். அதுவே கெட்ட மன அழுத்தமாக மாறும். மிதமான மன அழுத்தம் என்றால் அதற்கு மன நல ஆலோசகரை அணுகலாம்.

தீவிர மன அழுத்தம் என்றால் மனநல மருத்துவரை அணுகி மருந்து, சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதில் கூச்சப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தீவிர மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹலுசினேஷன் எனும் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் எண்ணம் இருக்கும். சம்பந்தமில்லாமல் எல்லோரையும் ஆபத்தான மனிதராகப் பார்ப்பார்கள். அவர்களுக்கு சிகிச்சை அவசியம்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட உடற்பயிற்சி செய்யலாம். ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் நடப்பது, ஓடுவது உடல் சோர்வைப் போக்கும். இதனால் மனச்சோர்வும் நீங்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை உடற்பயிற்சியால் சரி செய்ய முடியும். யோகா, தியானம் செய்யலாம்.உணவுப் பழக்க வழக்கமும் மன அழுத்தத்துக்கான காரணம். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். காய்கறி, பழம் எடுத்துக்கொள்ளலாம்’.

ஸ்ட்ரெஸ் தடுக்க… தவிர்க்க 10 கட்டளைகள்

*எந்த சூழலிலும் அவசரப்படாமல் பொறுமையைக் கடைபிடியுங்கள்

*எதிர்மறை சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் தன்னம்பிக்கை மனிதராக நிமிர்ந்து நில்லுங்கள்

*நன்றாகத் தூங்குங்கள். சமூக வலைதளங்களுக்கு அளவான நேரம் ஒதுக்குங்கள்

*கலை, நகைச்சுவை, பாடல்கள், படங்கள், பயணங்கள், வேடிக்கையான வீடியோக்கள் ஆகியவற்றை ரசியுங்கள்

*மனதுக்கு உற்சாகம் அளிக்கும் வாசகங்கள், தத்துவங்கள், மேற்கோள்களைப் படியுங்கள்

*புகைப்பழக்கம், மதுப்பழக்கம் என எதற்கும் அசைந்து கொடுக்காமல் நோ சொல்லுங்கள்

*பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தியானம், யோகா பழகுங்கள்

*ஃபாஸ்ட் ஃபுட் உணவைத் தவிர்த்து மற்ற செரிமான உணவுகளுக்கு யெஸ் சொல்லுங்கள்

*குழந்தைகளைக் கொஞ்சுங்கள். செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுங்கள்

*உற்சாகமாக இருங்கள். உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான வட்டத்தை உருவாக்குங்கள்.

மன அழுத்தம் ஒரு டேட்டா…

*30 கோடிக்கும் அதிகமான மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

*2015-க்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 1945-க்குப் பிறகு பிறந்தவர்கள் 10 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும், உலக அளவில் தற்கொலை விகிதம், 25 சதவீதம் குறைந்துள்ளது. 1990-ல் 1,00,000 பேருக்கு 14.55 என்ற நிலையிலிருந்த தற்கொலை விகிதம், 2016-ல் 1,00,000 பேருக்கு 11.16 ஆகக் குறைந்துள்ளது.

*இந்தியாவில் 2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது.

*இந்தியாவில் நான்கில் ஒரு பெண், பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார். இதுவரை 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியர்களில் மன அழுத்தத்துக்கான முதல் அறிகுறி வெளிப்படும் சராசரி வயது 31.9. வளர்ந்த நாடுகளில் இது இன்னும் குறைவான வயதாக இருந்தாலும், இந்தியாவில் இந்த சராசரி வயது தற்போது குறைந்துவருவது கவலையளிக்கிறது.

*பதின்பருவ வயதினரில் மன அழுத்த அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் மது அல்லது போதைப்பொருளை நாடுகின்றனர்.

*மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதத்தினர் தற்கொலை மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றனர். 17 சதவீதத்தினர் தற்கொலைக்கு முயற்சிக்கவும் செய்கிறார்கள்.

*இந்தியாவில் 4 லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மொத்தமே சுமார் 4,000 மனநல மருத்துவர்களும், 1,000 மனநல
ஆலோசகர்களும்தான் இருக்கிறார்கள்.

தொகுப்பு: இளங்கோ

Related posts

நோய்… மருந்து… நோயாளி… ஒரு பார்வை!

ஸ்வீட்கார்னின் சத்துகள்!

ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?