Tuesday, September 17, 2024
Home » வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: ஒடிசா அருகே இன்றிரவு கரை கடக்க வாய்ப்பு

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: ஒடிசா அருகே இன்றிரவு கரை கடக்க வாய்ப்பு

by Neethimaan

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்; சென்னை, நாகை
துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று மாலை அல்லது இரவு ஒடிசாவின் புரி மற்றும் மேற்குவங்கத்தின் தீகா கடற்கரை இடையே கரை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கூட இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோன்று குமரி, தென்காசி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தின் கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை , நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

அதிகபட்சமாக கோவை வால்பாறை, சின்கோனாவில் 5 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. இன்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 8.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு – தென்கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை புரி (ஒடிசா) மற்றும் தீகா (மேற்கு வங்கம்) இடையே கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், இதேபோன்று தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாளை முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்த வகையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் 12ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு, துறைமுகத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கையாக, சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம், நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

14 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi