புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று காலை வழக்கம் போல் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், வழக்கறிஞர் ஒருவர் தனது கையில் கட்டு போட்டு இருந்தார். அதனை பார்த்த தலைமை நீதிபதி, என்ன பிரச்னை என்று விசாரித்தார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர்,‘‘தன்னை ஐந்து தெரு நாய்கள் ஒன்றாக சூழ்ந்துக் கொண்டு கடித்து விட்டதாக’’ வேதனையாக தெரிவித்தார். அப்போது வேறு ஒரு வழக்கிற்காக ஆஜராகி இருந்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடிக்கு ஆளான சிறுவன் ரேபிஸ் பாதித்து அவனது தந்தையின் மடியிலேயே உயிரிழந்து விட்டான். ஏன் எனது உதவியாளர் கூட தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டார். அதனால் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து அதனை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,‘‘தெரு நாய்கள் விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவெடுக்கப்படும் ’’ என உறுதியளித்தார்.