திருப்புத்தூர்: திருப்புத்தூரில் வீதிகளில் கூட்டம் கூட்டமாக திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி, தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவற்றில் பல நாய்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீதிகளில் நடந்து செல்வோர் மற்றும் டூவீலர்களில் செல்வோரை தெருநாய்கள் விரட்டுகின்றன.
இதனால் பாதசாரிகள் மற்றும் டூவீலர் ஓட்டுனர்கள் பீதியில் தவறி விழுந்து காயமடைகின்றனர். அவ்வப்போது பொதுமக்களை தெருநாய்கள் கடித்து காயப்படுத்தி வருகின்றன. இதனால் வீதிகளில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி, தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.