ஊட்டி : ஊட்டி நகராட்சி சார்பில் நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல இடங்களிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வந்தன.இவை அவ்வப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் போன்றவற்றை விரட்டுகின்றன.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வந்தனர்.
பேண்ட்லைன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடு உள்ளிட்ட வளர்ப்பு கால்நடைகளை கடித்து கொன்று வந்ததால் நகரில் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சியை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நகர் நல அலுவலர் சிபி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் டாக் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து ஊட்டி நகரில் நாய் தொல்லை அதிகமுள்ள பகுதிகளில் சுற்றி திரிந்த தெருநாய்களை பிடித்தனர்.
ஊட்டி மருத்துவமனை சாலை பகுதி,மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதி,கூட்ஷெட் உள்ளிட்ட பகுதிகள் என மொத்தம் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. இவை வாகனத்தில் ஏற்றப்பட்டு இனபெருக்க கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: ஊட்டி நகரில் அச்சுறுத்தும் வகையில் சுற்றி திாியும் தெருநாய்களை கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் தனியார் அமைப்பின் உதவியுடன் நகரில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட நாய்களுக்கு ஏடிசி., எனப்படும் இனபெருக்க கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விடுவிக்கப்படும்.தொடர்ச்சியாக ெதருநாய்கள் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும், என்றனர்.