Thursday, June 27, 2024
Home » தெருநாய் கடித்து எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவனை சந்தித்து உயர்தர சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களை வலியுறுத்தினார் மாநகராட்சி மேயர்

தெருநாய் கடித்து எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவனை சந்தித்து உயர்தர சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களை வலியுறுத்தினார் மாநகராட்சி மேயர்

by MuthuKumar

சென்னை: சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் தெருநாய் கடித்ததினால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுவனை மேயர் ஆர்.பிரியா இன்று (18.06.2024) நேரில் சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் அச்சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேயர் அவர்கள் தெரிவித்ததாவது :
சென்னை மயிலாப்பூர் பகுதியில் சாய்சரண் என்ற 6 வயது சிறுவனை நேற்று (17.06.2024) தெருநாய் கடித்துள்ளது. அந்த நாய்க்கு பிஸ்கெட் கொடுக்க சென்றபோது, சிறுவனை நாய் கடித்துள்ளது. அந்தச் சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்பொழுது சிறுவன் நல்ல நிலையில் உள்ளார். மேலும், சிறுவனை கடித்த நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு உள்ளதா என மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கும் போதும், வீட்டின் அருகில் வைத்துக் கொள்ளும் போதும் தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளை தனியாக விடக்கூடாது. தெருநாய்களைப் பிடித்து அவற்றிற்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியபின், அவற்றை பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்ற சட்ட விதியினைப் பின்பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி செயல்பட வேண்டியுள்ளது. பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ள உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களுக்கான கணக்கெடுப்புப் பணியானது 2018ஆம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது 2024-ம் ஆண்டு இந்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தப் பணி முடிவுறும். வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கான உரிமத்தினை மாநகராட்சியின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதுவரை செல்லப் பிராணிகளுக்கான உரிமம் 5000-க்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாத உரிமையாளர்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு உரிய உரிமத்தினைப் பெற்றிட வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் மாடுகளுக்கு உணவு வழங்கவும், அவை ஓய்வெடுக்கவும் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். ஆனால் தற்போது மாடுகளை வளர்ப்பவர்கள் அதற்கான இடம் ஒதுக்காமல் மாடுகளை வளர்க்கின்றனர். மேலும், வெளியில் விடும்போதும் உரிமையாளர்கள் உடன் செல்வதில்லை. எனவே, மாடுகளை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை வெளியே விடும்போது தனியே விடாமல் உடன் செல்ல வேண்டும். மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை வெளியில் தனியாக விட்டால் மாநகராட்சியின் சார்பில் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக பிடிபடும் மாட்டிற்கு ரூ.5000/- எனவும், இரண்டாவது முறையாக அதே மாடு பிடிபட்டால் ரூ.10,000/-மும் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் மாட்டின் உரிமையாளர்கள் மெத்தனமாக தங்களின் மாடுகளை வெளியே விடுகின்றனர். மாநகராட்சி நிதிநிலை அறிவிப்பின்படி, மாடுகளை வளர்ப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு மாட்டுத் தொழுவம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

four + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi