புயல் வெள்ளத்தால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் கட்டணமின்றி நகல்களை பெற இணையதளம் உருவாக்கம்: அரசு அறிவிப்பு

சென்னை: புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டன. வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம். சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்