ஆலந்தூர்: பழவந்தாங்கல் சுரங்கப்பாதைக்குள் மழைநீர் கால்வாய் இரும்பு தடுப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மீது கனரக லாரிகள் வேகமாக செல்லும்போது உடைப்பு ஏற்பட்டு, நீர் கசிந்து சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயந்தபடி செல்கின்றனர். ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், மூவரசன்பட்டு, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் சென்னை மற்றும் தாம்பரம் மார்க்கமாக செல்ல இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த 10 ஆண்டுகளாக அடிக்கடி இது போன்ற உடைப்பு ஏற்படுவதும், தற்காலிகமாக சீரமைப்பு பணி மேற்கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது இந்த பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சுரங்கப்பாதையில் உள்ள மழைநீர் கால்வாயை முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.