ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது ரோந்து கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். திடீரென மீன்பிடி படகுகளை நோக்கி இலங்கை கடற்படையினர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசர அவசரமாக படகுகளை வேறு பகுதிக்கு ஓட்டி சென்றனர்.

இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் விரட்டியடிப்பு நடவடிக்கையால் மூன்று படகுகளில் மீன் வலைகளை மீனவர்கள் வெட்டி எறிந்துவிட்டு தப்பினர். இரவு முழுவதும் கடலில் பதற்றத்துடன் மீன்பிடித்து இன்று காலை கரை திரும்பிய மீனவர்களின் வலையில் குறைவான மீன்பாடுகளே இருந்தன. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை.

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கினர். இதனால் சரியாக மீன்பிடிக்க முடியாமல் இன்று கரை திரும்பினோம். ஒரு படகிற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றனர். வழக்கமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லும். ஆனால், இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு பயந்து நேற்று 300 படகுகளே கடலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: ஐகோர்ட்

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை