Monday, July 1, 2024
Home » பயிர் சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை

பயிர் சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை

by Neethimaan

சென்னை: பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவரும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களும் காலத்தே கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, கோடை மழை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிக்கும் அதிகமாக உள்ளதால், நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிப்பரப்பு சென்ற ஆண்டினைப் போலவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசாயன உரங்களை முன்னரே இருப்பு வைக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் நடப்புக்கோடைப்பருவம், குறுவை நெல் சாகுபடி மற்றும் இதர வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தேவையான இரசாயன உரத் தேவையினை முன்னரே கணக்கிட்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருப்பு வைக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள காரிப் பருவத்திற்கு, 4,23,000 டன் யூரியா, 1,45,000 டன் டிஏபி, 1,20,000 டன் பொட்டாஷ், 3,00,000 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 50,000 டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 10,38,000 டன் உரங்கள் தேவைப்படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உரத்துறையுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தேவையான உரங்களைப் பெற்று, இருப்பு வைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, இன்றைய தேதி (12.05.2023) நிலவரப்படி, 1,66,311 டன் யூரியா, 71,580 டன் டிஏபி, 12,528 டன் பொட்டாஷ், 1,86,011 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 19,138 டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 4,55,568 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள கோடை, குறுவை, முன்சம்பாப் பருவத்திற்குத் தேவையான மொத்த உரத் தேவையில் 43 சதவீத உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, யூரியா தேவையில் 39 சதவீதமும், டிஏபி தேவையில் 50 சதவீதமும், காம்ப்ளக்ஸ் தேவையில் 60 சதவீதமும், சூப்பர் பாஸ்பேட் தேவையில் 38 சதவீதமும் இருப்பு உள்ளது. பொட்டாஷ் உரத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான பொட்டாஷ் உரம் நியூ மங்களூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, மே மாதம் 3ம் வாரத்திற்குள் 43,000 டன் இறக்குமதி பொட்டாஷ் உரத்தை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீரான உர விநியோகத்தை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்

1. அனைத்து உரப் பைகள் மீதும் உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) அச்சிடப்பட்டுள்ளதால், விவசாயிகள் உரிய தொகையை செலுத்தி, விற்பனை முனையக் கருவியில் (PoS) பட்டியலிட்டு வாங்கிக் கொள்ளலாம்.

2. கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தல், உர விற்பனையின் போது விவசாயிகளுக்குத் தேவைப்படாத இணைபொருட்களையும் வாங்குவதற்குக் கட்டாயப்படுத்தல், விற்பனைப்பட்டியல் இல்லாது உர விற்பனை செய்தல், உரம் பதுக்கல், உரம் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உர உதவி மையத்திற்கு 93634 40360 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் புகாரை வாய்மொழியாகவோ அல்லது வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாகவோ அரசுக்குத் தெரிவிக்கலாம். விவசாயிகளின் புகார்கள் மீது, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

3. மேலும், சீரான உர விற்பனையினை உறுதி செய்வதற்காக சிறப்புப் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு, விதிமுறையினை மீறி செயல்படும் உரநிறுவனங்களை கண்காணிப்பதற்கும் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

போதுமான அளவு அனைத்து இரசாயன உரங்களும் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உழவர் பெருமக்கள் பயிரின் தேவைக்கேற்ப மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். அதிக உரமிட்டால் மகசூல் அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. மாறாக, அளவுக்கு அதிகமாக உரமிடும் போது, செலவு அதிகரிக்கும் என்பதுடன், பூச்சி, நோய் தாக்குதலும் ஏற்படும் என்பதால், விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன்படுத்துமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi