சென்னை: வெளிநாட்டிற்கு சென்று பணியாற்றும்போது இறந்த தமிழர்கள் குடும்பத்தில் உள்ள அவர்தம் மகன், மகளுக்கு திருமணம், கல்வி உதவித்தொகையாக ரூ20 ஆயிரம், ரூ12 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் சார்பில் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன், மகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிடும் வகையிலும்,
திருமணத்தின் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவினத்தால் அக்குடும்பத்தினர் கடனில் சிக்கித் தவிப்பதை தடுக்கும் பொருட்டும் அந்த குடும்பத்தில் உள்ள மகன், மகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ20 ஆயிரம் வழங்கிடவும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் விகிதத்தை அதிகரிப்பதற்காக கல்வி உதவித்தொகையாக ரூ12 ஆயிரம் வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், இந்த திருமண உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை பெற அயலக தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தல் வேண்டும்.