திருவொற்றியூர்: சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி, பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமையில், மாதவரம் மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கலாநிதி வீராசாமி எம்பி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த சிலம்ப போட்டியில் சுமார் 700க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்டனர்.
அவர்கள் சிலம்பம் மற்றும் கயிறு ஏறும் போட்டிகளில் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை வடகிழக்கு திமுக மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், ராமகிருஷ்ணன், மதிவாணன், தாமரைச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.