பெங்களூரு: பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. பின்னர் அமைச்சர் எச்.கே. பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது, ‘மாநில அரசு, சில தகவல்களை வெளியிடுவதாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அடிக்கடி கூறி வருகிறார். இனிமேல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கேட்கும் விவரத்திற்கு தலைமை செயலாளர் அல்லது முதன்மை செயலாளர்கள் அளிக்கிற பதில்கள் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகே அனுப்பி வைக்கப்படவேண்டும்.
அதுமட்டும் இன்றி சமீப காலமாக சி.பி.ஐ மாநிலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. டெல்லி போலீஸ் சட்டம் 1946ன் கீழ் சிபிஐ போலீசார் மாநிலத்தில் நடைபெற்ற குற்றங்களை விசாரணை நடத்தி வந்தது. சிபிஐ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால் கர்நாடகாவில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதியை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது’ என்றார்.