துரைப்பாக்கம்: நட்சத்திர ஓட்டலில் சுத்தம் செய்தபோது கண்ணாடி உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார். துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (36). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த 10 ஆண்டுகளாக கண்ணாடி சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த 8ந் தேதி அங்குள்ள நீச்சல்குளம் அருகே 20 அடி உயரத்தில் இருந்த கண்ணாடியை அவர் சுத்தம் செய்தார். அப்போது கண்ணாடி உடைந்து சூர்யா தலையில் விழுந்தது. இதில் பலத்த காயத்துடன் பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சூர்யா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.