நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் தாக்குதல் கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம்

சென்னை: வாடிக்கையாளரை இறக்கிவிட வந்தபோது, நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் கார் டிரைவரை தாக்கினர். இதனால் 40க்கும் மேற்பட்ட கார் டிரைவர்கள் ஓட்டல் முன்பு போராட்டம் நடத்தினர். மதுரவாயல் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த அழகுமுத்து (55), கால் டாக்சி நிறுவன கார் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தில் இருந்து வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக்கொண்டு தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்துள்ளார். அங்கு, ஓட்டலின் முன்பு கார் நிறுத்தப்பட்டு, வாடகை தொகையை ஜிபே மூலம் வாடிக்கையாளர் அனுப்பி கொண்டிருந்தார்.

அப்போது ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள், காரை ஓரமாக நிறுத்துமாறு டிரைவர் அழகுமுத்துவிடம் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஓட்டலில் பாதுகாப்பு பணியில் இருந்த அருண் (32), சதீஷ் (28), ரூபன் (35), செந்தில் குமார் (43) ஆகியோர் டிரைவர் அழகுமுத்துவை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து டிரைவர் சக டிரைவர்களுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், 40க்கும் மேற்பட்ட கால் டாக்சி டிரைவர்கள் ஓட்டல் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.  தகவலறிந்த வந்த தேனாம்பேட்டை போலீசார், போராட்டம் நடத்திய டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து டிரைவர்கள் கலைந்து சென்றனர். தாக்குதல் நடத்திய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!