தாம்பரம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், கடப்பேரி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இதில் பணியாளர்களுக்கான குளிர்சாதன ஓய்வறை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு குளிர்சாதன ஓய்வறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பணிமனையின் நிர்வாகிகள், போக்குவரத்து பணிமனையில் கழிப்பிடம் அமைத்து தர வேண்டும், பணிமனையின் செட் பகுதி தாழ்வாக உள்ளதால் அங்கு தரைப்பகுதியை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் வழங்கினர். கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உறுதியளித்தார். நிகழ்ச்சியின் போது மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி, வணிகத் துணை மேலாளர் தியாகராஜன், தாம்பரம் பணிமனையின் தொமுச தலைவர் சுதாகரன், பணிமனை நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்.