திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 6ம் தேதி கருட சேவையும், 10ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து 9ம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு கோயில் ஹ்ருத்தாப நாசினி குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், உற்சவர் வீரராகவர் 3 முறை குளத்தில் மூழ்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வைத்திய வீரராகவரை வழிபட்டனர். கோயில் குளம் ஆழமாக உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.