‘ஸ்ரீரங்கம் ஸ்டேசன்ல இருந்து வர்றேன்…’ ஓசி கடலை கேட்டு அடாவடி எஸ்.எஸ்.ஐ அதிரடி சஸ்பெண்ட்

திருச்சி: ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் உள்ள ஒரு பட்டாணிக்கடைக்கு கடந்த 1ம்தேதி இரவு ஒரு போலீஸ்காரர் சென்றுள்ளார். கடை உரிமையாளரிடம், தான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும், தனக்கு கொஞ்சம் கடலை தரும்படியும் ஓசி கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளரோ, காசு கொடுத்தால் கடலை தருவதாக கூற, உடனே அந்த போலீஸ்காரர் அட்ராசிட்டியில் ஈடுபட்டதோடு, விடாப்பிடியாக ஒரு கடலை பொட்டலத்தை இனாமாக பெற்று செல்கிறார். இதுகுறித்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வைரல் வீடியோவின் உரையாடல் வருமாறு:
போலீஸ்காரர்: ஸ்ரீரங்கம் ஸ்டேசன்ல இருக்கேன் நான் கொஞ்சம் கடலை கொடுன்னு கேட்டேன். கொஞ்சம் கொடுக்க கூடாதா? என் ஊர் லால்குடி தான். இங்கதான் ஒன்றரை வருஷமா இருக்கேன். ஸ்ரீரங்கம் ஸ்டேசன்ல இருக்கேன்னு சொல்றேன்… வேற ஸ்டேசன்லேர்ந்து வந்தா கேட்கிறேன்.
கடைக்காரர்: என்ன பத்தி கேட்டுப்பாருங்க. நானும் கண்ணியமா நடந்துக்கிறவன்தான். காசு கேட்டா கொடுத்துட்டு வாங்கிட்டு போக வேண்டியதுதானே. இப்ப இவ்வளவு பேர் பார்க்குறாங்க?
போலீஸ்காரர்: ஸ்ரீரங்கம் ஸ்டேசனில் இருந்து வந்திருக்கேன்னு சொல்றேன். பக்கா டிரஸ்சோட வந்து கேட்கிறேன். கொடுக்க கூடாதா?
கடைக்காரர்: காசு கொடுத்து கேட்டால் கொடுக்கப்போகிறேன்.
போலீஸ்காரர் : ஸ்ரீரங்கம் ஸ்டேசன் க்ரைம்லேர்ந்து வர்றேன்னு சொல்றேன். அரை மணி நேரமா நிக்குறேன் சார்..,(பக்கத்தில் இருப்பவரிடம் பஞ்சாயத்து வேறு). ஸ்ரீரங்கம் ஸ்டேசன்ல இருக்கேன். காசு கொடுத்து ஏன் கேட்கனும். ப்ரீயாதான் கேட்கிறேன். காசு கொடுத்தா கேட்கனும். (மீண்டும்) ஸ்ரீரங்கம் ஸ்டேசன்லேர்ந்து வந்திருக்கேன்னு சொல்றேன். இப்படியெல்லாம் மூச்சை போட்டா.., வாழ முடியாது தம்பி… . உன்னைவிட நாங்கள்ளாம் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கோம்.

இப்படியாக சென்ற உரையாடலுக்கு பின்னர் விடாப்பிடியாக ஒரு கடலை பொட்டலத்தை போலீஸ்காரர் இனாமாக பெற்றுக்கொண்டு நகர்கிறார். இதில் மற்றொரு போலீஸ்காரர் வேறு வந்து பஞ்சாயத்து செய்கிறார். இந்த வாக்குவாதம் சாலையில் சென்றவர்களை நிற்க வைத்து கவனிக்க செய்தது. இதை கண்டவர்கள் பத்து ரூபா கடலை பொட்டலத்துக்கு இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா என முகம் சுளித்தபடி சென்றனர். இந்த வைரல் வீடியோ மாநகர போலீஸ் கமிஷனர் காமினியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக அந்த போலீஸ்காரர் யார் என நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் என தெரிய வந்தது. இதனையடுத்து உடடினயாக அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

Related posts

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்