இந்த விழா தொடங்கி ஒவ்வொரு நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமான் மூலசானத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். குறிப்பாக அம்ச வாகனம், யாழி வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், தங்கக்குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த தைத்தேர் உற்சவத்தின் முக்கிய நாளான தைத்தேர் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை 25ம் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 26ம் தேதி மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 4 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.