ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகள்: பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் சுமார் ரூ.2 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஸ்ரீபெரும்புதூர் செல்வ பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் வி.ஆர்.பி.சத்திரம் ராமானுஜர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படுமா என்று கேட்டார்.

அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில் வருமாறு: ராமானுஜர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசிக்கின்ற 48 குடும்பங்களுக்கு சட்டப் பிரிவு 78ன்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த இடமானது வரதராஜூலு மேஸ்திரி என்பவரால் மண்டகப் படிக்காக கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம். அந்த இடத்தில் பங்குனி, தை மாதம் மற்றும் மாசி மகம் போன்ற காலங்களில் விழாக்கள் நடக்கின்றன.

அதில் மண்டபம் அமைந்திருக்கிறது. அந்த மண்டக படியில்தான் விழாவே நடத்தப்படுகிறது. அவர் இந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தானப் பத்திரம் வழங்கியிருப்பதால் அங்கு வசிப்பவர்களை அதே இடத்தில் தொடர்ந்து குடியமர்த்துவதற்குண்டான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர் மற்றும் கோயில் இணை ஆணையர் ஆகியோர்களிடம் கலந்துபேசி, வேறு ஏதாவது ஓர் இடத்தில் அவர்களைக் குடியேற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பின் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், உறுப்பினர் செல்வபெருந்தகை ஆகியோர் கலந்துபேசி, கோயில் இடத்தில் குடியிருப்போருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்துவிட்ட பின்னர், அந்த இடத்திலிருந்து அவர்களை அகற்றுவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ராமானுஜர் கோயிலுக்கு சுமார் ரூ.2 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதேபோல், ராமானுஜருடைய படம் சிதிலமடைந்திருந்ததை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் அந்தப் படத்தை இப்போது புதுப்பித்து தந்திருக்கிறோம்.
நிச்சயமாக அந்த மக்களுக்கு மறுவாழ்வாதாரம் தந்த பிறகுதான் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்துகின்ற நிகழ்வுகள் நடைபெறும்.இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

Related posts

முனீஸ்வரர் கோயிலில் நகை, பணம் திருட்டு

வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது

மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றத்தால் சிமென்ட் சாலை சேதம்