கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழுத்தம் கொடுப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விவாதிக்க கடந்த ஜூலை 27ம் தேதி ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க சிங்கள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இலங்கையில் சிறுபான்மை சமூகத்துடன் நல்லிணக்கம் பேண அதிபர் ரணில் விரும்புகிறார். இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தரும் 13ஏ சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அவர் அழுத்தம் தருவார் என அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.