நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதியது. இதில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் சக மீனவர்கள் மீட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் சக்திவேல் (40), தேவராஜ் (32), செருதூர் மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திக்கேயன் (46), செருதூர் தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் (36) ஆகியோர் கடந்த 9ம்தேதி மாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் மாலை கோடியக்கரை தென்கிழக்கே 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் வலையை விரித்து 4 மீனவர்களும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கப்பலால் செருதூர் மீனவர்கள் பைபர் படகில் மோதிவிட்டு அங்கிருந்து சென்றனர்
இதில் பைபர் படகு கவிழ்ந்து 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். அப்போது அருகே மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர், காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் சக்திவேல், தேவராஜ், கார்த்திக்கேயன் ஆகியோரை மட்டும் மீட்டனர். இதில் சதீஷை மட்டும் தொடர்ந்து தேடிய நிலையில் நள்ளிரவில் அவர் மீட்கப்பட்டார். பின்னர் சேதமடைந்த படகை தங்களது படகில் கட்டி, மீட்கப்பட்ட 4 மீனவர்களையும் செருதூருக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு அழைத்து வந்தனர். பின்னர் கிராம பஞ்சாயத்தாரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதில் காயமடைந்த 4 மீனவர்களும் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்தார் அளித்த புகாரின்பேரில் கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.