லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 325 ரன் குவித்தது. கேப்டன் போப் 154, பென் டக்கெட் 86 ரன் விளாசினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. நிசங்கா 64, கேப்டன் தனஞ்ஜெயா 69, கமிந்து மெண்டிஸ் 64 ரன் விளாசினர். 62 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 156 ரன்னில் சுருண்டது. லாரன்ஸ் 35, ஜேமி ஸ்மித் 67 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இதைத் தொடர்ந்து, 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது.
பதும் நிசங்கா 53 ரன், குசால் மெண்டிஸ் 30 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். குசால் 39 ரன் எடுத்து அட்கின்சன் வேகத்தில் சோயிப் பஷிர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, நிசங்கா சதம் விளாசி அசத்தினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். இலங்கை அணி 40.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 127 ரன் (124 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்னுடன் (61 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நிசங்கா ஆட்ட நாயகன் விருதும், இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.