இலங்கை ஜனாதிபதி தேர்தல்.. ஈழத்தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அறிவிப்பு!!

கொழும்பு : இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் வரும் 15ம் தேதி பெறப்பட இருக்கிறது. இதில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே ஆகியோர் களம் காணும் நிலையில் ஈழத் தமிழர்களின் தரப்பில் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் தெற்கே சிங்களர் பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஈழத் தமிழர்களின் தாயக நில பகுதியான வடக்கு கிழக்கில் இந்தியா கை ஓங்கி நிற்கிறது.

இலங்கையை மையமாக வைத்து பல்வேறு அரசியல் நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்தியா, சீனாவின் ஆதரவு எப்படி இருக்கும் என்பது விவாதிக்கப்பட்டும் வருகிறது. மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே சீனாவை முழுமையாக நம்பக்கூடியது; இந்தியாவை மிக கடுமையாக எதிர்க்க கூடியது. ரணில் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவரைத்தான் இந்தியா ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழர்கள் செலுத்தும் வாக்கு வெற்றியை தீர்மானிக்க கூடியதாக இருந்து வந்தது.

தற்போது யுத்தம் முடிவடைந்து ஈழத் தமிழருக்கான பிரதிநிதித்துவ தலைமை இல்லாத நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த திட்டமிட்டன. இந்நிலையில் முன்னாள் எம்பி அரியநேந்திரனை ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் கூட்டத்தின் பின்னர் பொது வேட்பாளராக அவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறிகாந்தா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் வேந்தன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். 7 தமிழ் கட்சிகளும் 7 குடிமை அமைப்புகளும் இணைந்து தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்