இந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 6ம் தேதி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மொத்தமாகக் கலைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இலங்கை அணி 1996ம் ஆண்டு கோப்பை வென்றபோது அணியின் கேப்டனாக இருந்தவருமான அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிகக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
7 பேர் கொண்ட இந்த தற்காலிக குழுவில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை, அதிபர் ரணில் விக்ரமசிங்கே கண்டித்துள்ளார். மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவை கலைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இல்லாவிட்டால், தனது கட்டுப்பாட்டின் கீழ் விளையாட்டுத் துறை வருமாறு புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அதிபர் கூறி உள்ளார்.
இதையடுத்து நேற்று இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் ஃபெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஹரினுக்கு கூடுதலாக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரோஷன் ரனசிங்கே பதவிநீக்கம் செய்யப்பட்டு ஃபெர்னாண்டோவுக்கு பதவி வழங்கி அதிபர் ரனில் விக்ரமசிங்கே நடவடிக்கை மேற்கோடனுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை சுத்தம் செய்ய விரும்புவதாக புதிதாக பதவியேற்ற இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எவருக்கும் எதிராகச் செல்ல தாம் எதிர்பார்க்கவில்லை, உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா உட்பட அனைவரின் உதவியுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை தூய்மை செய்ய விரும்புவதாக அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.