தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 144 ரன் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தி அசத்தியது. ராங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய தொடக்க வீராங்கனை கேப்டன் சமாரி அத்தபத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 119 ரன் (69 பந்து, 14 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். ஹர்ஷிதா சமரவிக்ரமா 26, அனுஷ்கா சஞ்சீவனி 31, விஷ்மி குணரத்னே 1, கவிஷா (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். மலேசியா பந்துவீச்சில் வினிபிரெட் துரைசிங்கம் 2, சுவாபிகா மணிவண்ணன், மஹிரா இஸ்மாயில் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய மலேசியா 19.5 ஓவரில் 40 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. எல்சா ஹன்டர் அதிகபட்சமாக 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (4 பேர் டக் அவுட்). அய்னா நஜ்வா 9 ரன்னுடன் (43 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் ஷாசினி கிமானி 3, காவ்யா கவிண்டி, கவிஷா திலாரி தலா 2, இனோஷி பிரியதர்ஷினி, சச்சினி நிசன்சலா, அமா காஞ்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 144 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. சமாரி அத்தபத்து ஆட்ட நாயகி விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் இலங்கை பி பிரிவில் முதலிடம் வகிக்கிறது