Monday, July 8, 2024
Home » இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்திவெளியுறவுத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்திவெளியுறவுத் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

by MuthuKumar

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (07.08.2023) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (07.08.2023) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், IND-TN-06- MM-948 பதிவு எண் கொண்ட படகில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 14 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 30 நாட்களில் மட்டும், 3 வெவ்வேறு சம்பவங்களில், 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள், பல தலைமுறையாக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அளிப்பதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களை தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை காண வேண்டுமென்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தலையீடும், ஆதரவும், இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்த்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

18 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi