தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பரபரப்பான பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் மோதிய இலங்கை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
ராங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 60 ரன் (47 பந்து, 10 பவுண்டரி) விளாசினார். ரிச்சா கோஷ் 30 ரன் (14 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ஷபாலி வர்மா 16, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் கவிஷா 2, பிரபோதனி, சச்சினி நிசன்சலா, சமாரி அத்தப்பத்து தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அத்தப்பத்து இணைந்து துரத்தலை தொடங்கினர். விஷ்மி 1 ரம் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, இலங்கை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. எனினும், சமாரி அத்தப்பத்து – ஹர்ஷிதா சமரவிக்ரமா ஜோடி 2வது விக்கெட்டுக்கு உறுதியாக விளையாடி 87 ரன் சேர்த்தது.
அத்தப்பத்து 61 ரன் (43 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தீப்தி ஷர்மா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இதனால் உற்சாகம் அடைந்த இந்திய வீராங்கனைகள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். ஆனால், ஹர்ஷிதா – கவிஷா தில்ஹாரி இணையின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஹர்ஷிதா 69 ரன் (51 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கவிஷா 30 ரன்னுடன் (16 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆசிய கோப்பை பைனலில் இந்திய அணியிடம் ஏற்கனவே 5 முறை மண்ணைக் கவ்வியிருந்த இலங்கை அணி, 6வது முயற்சியில் அபாரமாக வென்று முதல் முறையாக சாம்பியனாகி சாதனை படைத்தது. 8வது முறையாக கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. இலங்கையின் ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆட்ட நாயகி விருதும், கேப்டன் சமாரி அத்தப்பத்து தொடர் நாயகி விருதும் பெற்றனர்.