Wednesday, September 18, 2024
Home » தீய சக்திகளை விரட்டும் ஸ்ரீசாமுண்டீஸ்வரி

தீய சக்திகளை விரட்டும் ஸ்ரீசாமுண்டீஸ்வரி

by Nithya
Published: Last Updated on

சக்தி என்றாலே சகல உயிர்களுக்கும் பலம் உண்டாகும். கூடவே பயமும் உண்டாகும். அதில் தன்னை நாடி வந்து வணங்குவோரின் வாழ்வில் பயத்தை நீக்கி, பலத்தை கொடுக்கும் சக்தியாகத் திகழ்கின்றாள் படைவீட்டில் அருள்புரியும் மாயா சக்தியான
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி.

தமிழகத்தின் சிறப்புவாய்ந்த சக்தி தலங்களுல் ஒன்றான படைவீடு என்னும் படவேடு, ஜவ்வாதுமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பாலாற்றுக்கு தெற்கிலும், சேயாற்றுக்கு வடக்கிலும், மலைகளும், குளிர்ச்சியான காடுகளும் சூழ்ந்த இப்படைவீடு கமண்டல நதிக்கரையில் சிறப்பு பெற்று விளங்குகின்றது.

ஆதியில் இந்த தலம் படைவீடு, மாதுபுரி, குண்டலிபுரம், குண்டலிநகரம் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் பூமியாகத் திகழும் இந்த திருத்தலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இருந்தனவாம்.

நந்திவர்மப் பல்லவனின் ஆட்சி இப்படைவீட்டில் நடைபெற்றுள்ளது. சம்புவராய மன்னர்கள் படைவீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களின் காலத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், லட்சுமி நரசிம்மர், வேணுகோபால சுவாமி ஆகிய திருக்கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதோடு, சிறிய கோட்டை, பெரிய கோட்டை என இரு கோட்டைகளும் கட்டப்பட்டுள்ளன. விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்கர் கால கல்வெட்டுகள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆதியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவானது இத்தலத்தினில்தான். எனவே இங்கு ஆஞ்சநேயர் எட்டுத் திக்கிலும் காவல் புரிகின்றார். இந்துக் கடவுள்களின் திருக்கோயில்கள் நிரம்பப்பெற்ற திருத்தலமிது. இங்கே குடிகொண்டருளும் அன்னை ஸ்ரீ ரேணுகாதேவியின் திருக்கோவிலுக்கு அருகே கோயில் கொண்டு, தீய சக்திகளை விரட்டி, நல்வரங்களை அருளிக் கொண்டிருக்கின்றாள் ஸ்ரீ ஜெய விஜய சாமுண்டீஸ்வரி.

விதர்பதேச மன்னனான இரைவதனுக்கு மகளாகப் பிறக்கின்றாள் ஸ்ரீ ரேணுகாதேவி. தக்கப் பருவமடைந்தாள். “எனது மனதுக்குப் பிடித்தவரும், என்னை போரில் வெல்பவரையுமே நான் திருமணம் செய்வேன்’’ எனக் கூறிய ரேணுகா. திக்விஜயம் செய்து, பல அரசர்களை மண்டியிடச் செய்தாள். பின்னொரு நாளில் ஜவ்வாதுமலைத் தொடரின் கீழுள்ள குண்டலிபுரத்தை அடைந்து, ஜமதக்கினி முனிவரது ஆசிரமத்தை நெருங்கினாள்.

தனது சேனைகளை சந்துதுவாரம் என்னும் சந்தவாசலில் நிறுத்தினாள். ஜமதக்கினி தனது சீடர்களை அனுப்பி, ரேணுகையை இழுத்து வரும்படி கட்டளையிட்டார். அவரது பிரதான சீடனான அகிர்தவிருணன் தனது மந்திர தண்டத்தால் பல வீரர்களை வரவழைத்து ரேணுகையுடன் போரிட்டான். அப்போது தனது மாயா ரூபியும், உற்ற தோழியுமாக விளங்கும் சாமுண்டிதேவியிடம். எதிர்க்கும் சேனைகளை தவிடு பொடியாக்கக் கட்டளையிட்டாள்.

ஸ்ரீ ரேணுகையின் கட்டளையை ஏற்ற சாமுண்டீஸ்வரி ஜமதக்கினியின் சேனைப் படைகள் மீது அன்புமாரி பொழிந்தாள். பலரை தனது நெற்றிக்கண் தீயினால் பஸ்மமாக்கினாள். சாமுண்டி தேவி ஏற்படுத்திய தீயை தனது கமண்டல நீரினால் தணித்தார் ஜமதக்கினி முனிவர். பின்னர் குருவின் கட்டளைப்படி அகிர்தவிருணன்…லட்சம் செங்குவளை மலர்களால் சாமுண்டிதேவியை சுற்றி வளைத்து கமண்டலநிதியின் கரையில் நிலை நிறுத்தினான். அன்று முதல் இங்கு ஸ்ரீ ரேணுகையின் மாயா சக்தியாக, துர்கையின் அம்சமாக ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பிகை அருளாட்சிபுரிந்து வருகின்றாள்.

பின், ரேணுகை தனது படைகளை இவ்விடத்தில் நிறுத்திவிட்டு, தனது இன்னொரு தோழியான சகியுடன் ஆனி மாதம் மக நட்சத்திரத்தன்று வனத்திற்குள் நுழைந்தாள். ரேணுகாதேவியின் படைகள் நிறுத்தப்பட்ட இடமே சேனாஹதம் என்றும், படைவீடு என்றும் ஆனது. பின்னர் ரேணுகை ஜாமதக்னியை மணந்து நான்கு பிள்ளைகளை பெற்றெடுக்கின்றாள். கந்தர்வனால் மனச்சஞ்சலம் கொண்டதால், மகன் பரசுராமரால் தலை வெட்டப்பட்டு பின் மாறிய தலையினால் மாரியம்மனாக இன்றுவரை பக்தர்களுக்கு அருள்மாரி புரிந்து வருகின்றாள். வவஸ்வான் என்னும் அயோத்திய அரசன் ஓர் அசுரனால் தாக்கப்பட்டு, வசிஷ்டரிடம் இத்தல மகிமைகளை கேட்டறிந்து, இந்த குண்டலி புரம் அடைந்து, அன்னை ஸ்ரீ ரேணுகையையும், ஸ்ரீ சாமுண்டி தேவியையும் பூஜித்து, வழிபட்டு, அசுரனை வென்று ஆட்சியைப் பிடித்தான். அசுரனை வென்ற பின் அன்னை ஸ்ரீ ரேணுகைக்கும், ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் ஆலயம் எழுப்பினான். பின் இந்த குண்டலி நகரத்தில் அரசாட்சி நடத்தி பலகாலம் வாழ்ந்தான். இறுதியில் ஈசனடி சேர்ந்தான்.

சிறியதொரு ஆலயமாகத் திகழ்ந்தாலும், அன்னையின் பேரருள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரே திருசுற்றுடன், ஏகதள விமானத்தோடு கூடிய அன்னையின் சந்நதி அற்புதமாக திகழ்கின்றது. முதலில் அத்திமரத்திலான அன்னை ஸ்ரீரேணுகையின் சிற்பம் காணப்படுகிறது. கருவறையில் வடக்கு முகமாக சங்கு – சக்கரம் ஏந்தி 18 கரங்களுடன் சிம்ம வாகனத்தில், அமர்ந்த கோலத்தில் சாந்த வடிவினளாய் அருள்பாளிக்கின்றாள் ஸ்ரீ ஜெய விஜய சாமுண்டீஸ்வரி.

உயிர்பலி ஏற்காத தெய்வமாக நவ துர்க்கையின் வடிவாக விளங்குகின்றாள் இவ்வன்னை. நல்லவர்களுக்கு சாந்த ரூபியாகவும், தீயவர்களுக்கு துஷ்ட நிவர்த்தினியாகவும் காட்சியளிக்கின்றாள் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி. படைவீட்டு நாயகியாம் அன்னை ஸ்ரீ ரேணுகாதேவிக்கு என்னென்ன பூஜைகள் நடக்கின்றதோ, அதுபோலவே இங்கு சாமுண்டீஸ்வரிக்கும் நடைபெறுகின்றது.

பிரதி செவ்வாய்-வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரங்கள் நடைபெறுகின்றன. அதோடு, அருள்வாக்கும் சொல்லப்படுகின்றது. ஆடி மாதம் 7 வெள்ளிகளும் இங்கு விசேட பூஜைகளும் சிறப்புடன் நடைபெறுகின்றன. நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சி அருள்கின்றாள். அம்பாள் பிறந்த தினமான ஆடி மூன்றாம் வெள்ளி அன்று சிறப்பு அபிஷேக -அலங்கார – ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆனி மாத பௌர்ணமியில் 1008 பால்குட விழாவும், 1008 பூங்கரகத் திருவிழாவும், நவராத்திரியில் திருவிளக்கு பூஜையும், விஜயதசமியில் சிறப்பு அபிஷேக -அலங்காரங்களும் நடைபெறுகின்றன.

இவ்வன்னையை வணங்கினால்…மூதாதையர்களால் உண்டான பெண் சாபம் நீங்கும். காலசர்ப்ப தோஷம், ராகு – கேது தோஷம், பித்ரு தோஷம் ஆகியன நீங்கும். பில்லி – சூனியம் – ஏவல் போன்ற தீய சக்திகளை விரட்டி, பலர் வாழ்வில் நிம்மதி அளிக்கின்றாள். பிரார்த்தனை நிறைவேறியபின் வரும் பக்தர்கள் அம்பாளுக்கு புதுப் புடவை சாற்றி, அன்னதானம் செய்கின்றனர். கடன் பிரச்னை, குடும்ப ஒற்றுமை, கைவிடப்பட்ட நோய்கள் ஆகியவற்றுக்குத் தீர்வாக 108 எலுமிச்சம்பழமாலை சாற்றி வேண்டிக் கொள்கின்றனர் பக்தர்கள்.

இப்படைவீட்டில் ஸ்ரீ ரேணுகாதேவியை தரிசிக்கும் பக்தர்கள், ரேணுகியின் தோழியான, ரேணுகாவின் மறுவடிவமான ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகமாகும்.

எப்படி செல்வது?
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் திருவண்ணாமலை – வேலூர் பேருந்து சாலையில் உள்ள சந்தவாசலில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது படவேடு.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi