Wednesday, July 3, 2024
Home » நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல், துப்பாக்கிச்சூடு, சிறைபிடிப்பு;த(க)ண்ணீரிலும் தவிக்கும் மீனவர்கள்: தமிழகத்தில் முடக்கப்படும் மீன்பிடி தொழில்

நடுக்கடலில் தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல், துப்பாக்கிச்சூடு, சிறைபிடிப்பு;த(க)ண்ணீரிலும் தவிக்கும் மீனவர்கள்: தமிழகத்தில் முடக்கப்படும் மீன்பிடி தொழில்

by Ranjith

‘தரை மேல் பிறக்க வைத்தான் … எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்…’ இதுதான் மீனவர்களின் வாழ்க்கை. இவர்களுக்கு கடல்தான் முதன்மையான வீடு. சிறு வயதில் இருந்து அலைகளுடன் கலந்து, குடும்ப பாரத்தை தலைமுறை தலைமுறையாய் தூக்கி பிடித்து வருகிறார்கள் மீனவர்கள். ஆனால், சர்வதேச எல்லை பிரச்னையால், அண்டை நாட்டு கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. எப்போதும் மீனவர்களின் நலனை காப்பதாக கூறி கொள்ளும் ஒன்றிய அரசு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், சிறைபிடிக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் தடுக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பெரும் குடைச்சல் கொடுப்பது இலங்கை கடற்படைதான். சமீபத்தில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை திவாலாகும் சூழலுக்கு சென்றது.

பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதியத்தின் உதவி கரத்தால் தற்போது மீண்டு வருகிறது. இலங்கை மக்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு பொருள் உதவிகளையும் செய்து உள்ளது. ஒரு பக்கம் உதவிகளை பெற்று கொண்டு, மறுபக்கம் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கிறது. சமீபத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, டெல்லிக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை பிரதமர் சென்ற சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து பாஜ சார்பில் பாதயாத்திரை தொடங்கப்பட்டது. அப்போது, மீனவர்களின் நலனில் அவர்கள் அக்கறை காட்டுவதுபோல் பேசினர். ஆனால், மீனவர்கள் மீதான தாக்குதல், சிறைபிடிப்பு குறித்து மறந்து கூட வாய் திறக்கவில்லை.

தமிழகத்தில் மீன்பிடித்தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். பாரம்பரிய முறைப்படியும், படகுகளில் சென்றும் மீன்பிடித்தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் அமைந்துள்ளது. தமிழக மீனவர் குடும்பங்கள் இக்கடலை நம்பியே உள்ளது. இறால், நண்டு, கணவாய், திருக்கை உள்ளிட்ட பலவகை மீன்வளம் செறிந்த இக்கடல் பகுதியில் தொன்று தொட்டு தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களது வாழ்க்கையில் புயலாய் வந்தது கச்சத்தீவு பிரச்னை. இந்திய நாட்டின் ஒரு பகுதியான, தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறிய நாள் முதல் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலில் சிக்கல் உருவாகத் துவங்கியது.

* இலங்கை அட்டகாசம்
பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது கடந்த 40 ஆண்டுகளாக தொடர்கிறது. நடப்பாண்டில் ஜனவரி துவங்கி ஜூலை 25ம் தேதி வரை தமிழக மீனவர்களின் 14 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இதில் ஒரு படகு விடுவிக்கப்பட்டது. மற்ற 13 படகுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4 கோடி. கைப்பற்றப்பட்ட 13 படகுகளில் 4 படகுகள் இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசுடமையாக்கப்பட்டுள்ளன. சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 92 தமிழக மீனவர்களில் 15 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

* அலட்சிய பாஜ அரசு
கடற்படையினர் தாக்குதல், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஒருபுறம் என்றாலும், கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் விடுதலையாகி திரும்பினர். பறிமுதல் செய்த படகுகளும் விடுவிக்கப்பட்டு மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடைசியாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த வரை இந்த நிலையே நீடித்து வந்தது. ஆனால், 2014க்கு பின் அமைந்த பாஜ அரசு, மீனவர்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. இதனால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகள் பல ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் அந்நாட்டு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவைகள் கடல் காற்று, அரிப்பு, புயல், மழையால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

* அரசுடைமை சட்டம்
மீனவர்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து விடுவிக்கப்பட்ட சில படகுகள் மீட்டு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. 2018ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்தினால், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகள் அந்நாட்டிற்கே அரசுடைமையாக்கப்படுகின்றன. மேலும், அரசுடமையாக்கிய தமிழக மீனவர்களின் படகுகள் பொது ஏலத்தில் விடப்பட்டு உடைக்கப்படுகின்றன. இதனால் மீன் பிடிக்க செல்லவே தமிழக மீனவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு, படகுகள் அரசுடமையாக்குதல் போன்ற நடவடிக்கையின் மூலம் தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த மீன்பிடித் தொழிலையும் முடக்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீப காலமாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல்களின் கண்காணிப்பு, ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மீன்பிடி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் பிரச்னை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க முடியுமா, தமிழக மீனவர்கள் நலனுக்கு எதிரான இலங்கையின் புதிய கடல் தொழில் சட்டம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது. எனவே, மீனவர்கள் தண்ணீரில் சிந்தும் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைத்து மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அவர்களை காப்பாற்றுமா?.

* 50க்கும் மேற்பட்ட படகுகள் அரசுடைமை
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 75 மீனவர்கள் வரை காயமடைந்தனர். 2,500 மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர். 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் திரும்ப கிடைக்காமல் இலங்கை வசம் உள்ளன. 50க்கும் மேற்பட்ட படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

* 23 ஆண்டில் 48 பேர் பலி 6 ஆயிரம் மீனவர்கள் கைது
பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 2001 முதல் 2023 வரை மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல், துப்பாக்கிச்சூடு, கடலில் மூழ்கடித்தல், தீவைத்து கொளுத்துதல் போன்ற சம்பவங்களில் ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம், புதுக்கோட்டை, மல்லிப்பட்டினம், நாகப்பட்டினம், தூத்தூர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 48 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 800 படகுகள் வரை சிறைபிடிக்கப்பட்டன. இதில் 500 படகுகள் வரை விடுவிக்கப்பட்டு திரும்ப கிடைத்தன. 2001 முதல் 2013 வரை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். படகுகளும் திரும்ப கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

*கச்சத்தீவை மீட்பதே; பிரச்னை தீர ஒரே வழி
1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி கச்சத்தீவு கடல் பகுதி எப்போதும் போல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க, தீவு நிலப்பரப்பில் தங்கி வலை உலர வைக்க, ஓய்வெடுக்க உரிமை இருந்தது. 1976ல் போடப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தில் முதல் ஒப்பந்தத்தில் இருந்த மீன்பிடி உரிமை, தீவு நிலப்பகுதியை பயன்படுத்துவது இரண்டு உரிமைகளும் ரத்து செய்யப்பட்டது. 1990களில் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையிலான கடல் எல்லை பகுதி வரையறுக்கப்பட்டது. இதன் பின்னர் இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் சென்றால் அத்துமீறி நுழைந்ததாக சிறைபிடிக்கப்பட்டனர்.

* டிகோ கார்சியா தீவிலும் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்
பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே மீன்பிடிக்க முடியும். ஆழ்கடலில் மீன்பிடிப்பதில் குமரி மீனவர்கள் கைத்தேர்ந்தவர்கள். இந்திய பெருங்கடல் பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டிகோ கார்சியா தீவுக்கு செல்லும் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் வல்லமை கொண்டவர்களான குமரி மாவட்ட மீனவர்கள்தான் எல்லை தாண்டிய மீன்பிடி தடை சட்டத்தின் கீழ், அதிகளவில் சிறைபிடிக்கப்படுகிறார்கள். இவ்வாறு சிறைபிடிக்கப்படும் மீனவர்களை அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி விசைப்படகுகள் தொடர்பான தகவல்களை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்களை விடுவிக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஓராண்டில் மட்டும் 67 விசைப்படகுகள் பிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் இது பற்றிய விபரம் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, இந்திய அரசின் மூலம், தமிழ்நாடு மீன் வளத்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த படகுகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ஒரு விசைப்படகுக்கு மட்டும் தான் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற படகுகளுக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அபராத தொகையை தமிழ்நாடு அரசிடம் தான் செலுத்த வேண்டும். அபராதம் கட்டாததால், 66 விசைப்படகுகளுக்கு மானியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. சமீப காலங்களில் மட்டும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 86 மீனவர்கள் டிகோ கார்சியாவில் சிறைபிடிக்கப்பட்டு சிறை தண்டனை, அபராதம் போன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

*மீனவர் வாழ்வாதாரம் கெடுக்கும் கடல் தொழில் மீன்பிடிச் சட்டம்

இலங்கை அரசின் கடல் தொழில் நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் இலங்கையின் புதிய கடல் தொழில் மீன்பிடி சட்டம் முன்வைக்கப்பட்டது. இச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து பிடிபடும் வெளிநாட்டு படகு மற்றும் கப்பல்களுக்கு அதன் நீள, அகலத்திற்கு தகுந்தாற்போல் ரூ.60 லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இலங்கை கடல் பகுதிக்குள் வெளிநாட்டு படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டால் மீன்பிடி படகு இலங்கை அரசுடமையாக்கப்படும்.

அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு எல்லை தாண்டியதாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் இலங்கையின் இந்த புதிய சட்டத்தில் இடம் உள்ளது. தற்போது ஒன்றிய அரசின் நடவடிக்கையினால் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் விடுதலையாகி தாயகம் திரும்புகின்றனர். ஆனால் அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்படும் தமிழக மீனவர்களின் ரூ.35 லட்சத்துக்கும் அதிக மதிப்புடைய மீன்பிடி விசைப் படகுகள் இலங்கை நீதிமன்றங்களின் உத்தரவுப்படி அரசுடமையாக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இலங்கை அரசின் புதிய கடல் தொழில் மீன்பிடி சட்டத்தினால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

*ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி
இந்தியாவின் கடலோர மாநிலங்களில் பிரதான தொழிலாகவும், அதிகளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தொழிலாகவும் மீன்பிடித் தொழில் விளங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து மட்டுமே மீன் ஏற்றுமதியின் மூலம் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. ஆனால் வரும் காலங்களில் இது நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகிவுள்ளது. தமிழக மீனவர்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக இலங்கை கடற்படையின் நடவடிக்கை உள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகள் பிடிபட்டால் திரும்ப கிடைக்காது என்ற நிலையில் வரும் காலத்தில் மீன்பிடித்தொழில் நலிவடையும் நிலை உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் ஏனோ ஒன்றிய அரசு அக்கறை காட்டாமலும், ஆர்வம் இல்லாமலும் நாட்களை கடத்தி வருவது வேதனைக்குரிய செயலாகும். ஒன்றிய அரசுக்கான வருவாயை உயர்த்திப் பிடிக்கும் மீனவர்களின், வாழ்வாதார பிரச்னைகளை தீர்ப்பதில் ஒன்றிய அரசு அக்கறை காட்டாதது, ஒட்டுமொத்த மீனவர்களையும் ஆத்திரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi