Saturday, June 29, 2024
Home » இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: 3 விசைப்படகுகளும் பறிமுதல், இன்று முதல் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: 3 விசைப்படகுகளும் பறிமுதல், இன்று முதல் வேலைநிறுத்தம்

by Ranjith

ராமேஸ்வரம்: மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை விடுவிக்க கோரி இன்று முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து 2 பெரிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென சுற்றிவளைத்து படகுகளையும் மீனவர்களையும் சிறைபிடித்தனர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின், ரைமண்ட், ஹரின் ஆகியோரின் 3 படகை பறிமுதல் செய்தனர். படகில் இருந்த மீனவர்கள் காளீஸ்வரன் (44), முருகானந்தம் (27), முத்துக்குமார் (43), சீமோன் (41), ராஜ் (48), சத்தியபிரிக்லின் (36), சர்ப்பிரசாதன் (63), கருப்பையா (41), சுரேஷ் பாபு (37), காளீதாஸ் (35) உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்களின் கூட்டம், சேசு தலைமையில் நடைபெற்றது. இதில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல மாதங்களாக இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். 2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

* மண்டபம் மீனவர்களுக்கு மிரட்டல்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் 2 சிறிய கப்பல்கள் மற்றும் 5க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் படகுகளில் ரோந்து வந்தனர். மீனவர்களை சிறைபிடிப்பது போல அச்சுறுத்தி மிரட்டும் வகையில் விடிய விடிய ரோந்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் குறைவான மீன்களோடு நேற்று காலை கரை திரும்பினர்.

* கடலில் மூழ்கிய படகு 5 பேர் உயிர் தப்பினர்
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கிங்ஸ் லிங்க் ஆஸ்டின் என்பவரின் விசைப்படகில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது படகின் அடிப்பகுதி திடீரென சேதமடைந்து கடல்நீர் உள்ளே புகுந்ததில் படகு மூழ்கியது. அதிலிருந்த மீனவர்கள் ஆஸ்டின், மாணிக்கம், முனியசாமி, நிரோபின் ஆகியோர் சக மீனவர்களின் படகில் ஏறி பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

You may also like

Leave a Comment

nine + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi