இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 மீனவர்கள் 4 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாக உள்ளது.

அண்மையில் 2 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்தனர். அதற்கு பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவ குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, பாரம்பரிய மீன்பிடி தொழிலை கடினமாக்கி உள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டியது இன்றியமையாதது. கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்து, தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?