கூடலூர்: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், ஓய்வு எஸ்பி மகன் பரிதாபமாக பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள பத்து நோன்பு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். ஓய்வு பெற்ற எஸ்பி. இவரது மகன் கார்த்திக் (35). இவர், கனடாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். 2 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த கார்த்திக் பெற்றோருடன் இங்கேயே தங்கியிருந்தார். இவரது நண்பர் நிதீஷ்குமார் (24), மின்வாரிய தற்காலிக ஊழியர். இவர்கள் இருவரும் நேற்று இரவு கூடலூரில் இருந்து கம்பத்திற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை கார்த்திக் ஓட்டி வந்தார்.
தனியார் பண்ணை அருகே, எதிரே வந்த சரக்கு வாகனம் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் டூவீலரில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். நிதீஷ்குமார் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில்,கூடலூர் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகனம் ஓட்டி வந்த டிரைவர் ஸ்டாலினை (34) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.