ஸ்பிரே இயந்திரம் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலி

*கரூர் அருகே சோகம்

தோகைமலை : கரூர் அருகே ஸ்பிரே இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலியானார்.கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே கடவூர் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (49). பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி மல்லேஸ்வரி (44). இவர்களுக்கு ஜெயக்குமார் (22), செல்வி (17), சிவமுருகன் (12) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வழக்கம் போல் கிராமங்களுக்கு சென்று பழைய பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து மதியம் குடும்பத்துடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு உள்ளார்.

பின்னர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்கு சென்று பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தார். அப்போது விவசாய பயிருக்கு மருந்து அடிக்கும் பழைய ஸ்பிரே இயந்திரத்தில் இருக்கும் பித்தளை பொருட்களை எடுப்பதற்காக அதை சம்மட்டியால் அடித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக பழைய ஸ்பிரே இயந்திரம் திடீரென வெடித்து சிதறியது. இதில் கிருஷ்ணமூர்த்தி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த வெடி சத்தமானது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதோடு, கிருஷ்ணமூர்தியின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறியது. கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடிவந்து பார்க்கும் போது கிருஷ்ணமூர்த்தி உடல் சிதறி இறந்து கிடந்ததை கண்டு அசிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று பழைய இரும்பு பொருட்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், தோகைமலை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், கிருஷ்ண மூர்த்தியின் உடலை கைபற்றி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இயந்திரம் வெடித்ததற்கான காரணம் குறித்து அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு