Friday, September 20, 2024
Home » விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்லும்போது மாணவிகளிடம் பாலியல் டார்ச்சரில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை: உரிய சட்ட திருத்தம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்லும்போது மாணவிகளிடம் பாலியல் டார்ச்சரில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை: உரிய சட்ட திருத்தம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

by Karthik Yash

மதுரை: விளையாட்டு போட்டிகளின்போது பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க மாணவிகளுடன் பெற்றோரையும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை வழங்கும்படி சட்ட திருத்தம் மேற்கொள்ளவும் அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் தமிழ்செல்வன். கடந்த 2018ல் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவிகளை ஆசிரியர் தமிழ்செல்வன் அழைத்து வந்திருந்தார்.

அப்போது ஒரு மாணவியை இரவு நேரத்தில் தங்குவதற்கு ஒரு விடுதிக்கு அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார், உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ெசல்வனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் கடந்த 2021ல் உடற்கல்வி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. மாணவிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு தண்டனை வழங்கிய உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. படிப்பையும், விளையாட்டையும் தொடர முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி இருப்பதால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு என்பது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. படிக்கும் இடங்களில் இருந்து விளையாட்டிற்காக வெளியில் செல்லும்போது மாணவிகளை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அவர்களால் படிப்பையும், விளையாட்டையும் தொடர முடியும்.

எனவே, விளையாட்டு போட்டிகளுக்காக மாணவிகள் வெளியூர் செல்லும்போது அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு செலவில் உடன் அழைத்துச் செல்லவும், விளையாட்டிற்காக செல்லும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்றுத்தரவும் தேவையான சட்டத் திருத்தங்களை தலைமை செயலாளர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை 2025 பிப்ரவரி 2ம் வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு ேபாட்டிகளுக்காக மாணவிகள் வெளியூர் செல்லும்போது அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு செலவில் உடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

1 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi