சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தார். தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீப காலமாக மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாததால், சிறிது காலம் ஓய்வு விட்டுள்ளார். இந்த நோயை குணப்படுத்த விரைவில் அமெரிக்காவில் 6 மாதம் தொடர் சிகிச்சை எடுக்க உள்ளார். இந்த சூழலில், நடிகை சமந்தா தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை விசிட் அடித்து சாமி தரிசனம் செய்து வருகிறார். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சென்ற சமந்தா, 690 படிக்கட்டிலும் சூடம் ஏற்றி சென்று வழிபட்டார். சில நாட்களுக்கு முன்பு வேலூர் தங்க கோயிலில் தரிசனம் செய்தார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பண்ணாரி அம்மனை பயபக்தியுடன் வணங்கி சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த சமந்தாவை பக்தர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.