நன்றி குங்குமம் தோழி
சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் இருப்பதாக கூறுகிறது. இச்செடியின் பல பகுதிகள் மூலிகையாக பயன்படுகின்றது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும், 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக் கீரையில் மாவுச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
*அகத்திக்கீரை சாறுடன், சிறிது தேன் கலந்து குழந்தைகளின் உச்சந்தலையில் தடவினால், தலையில் சேர்ந்து இருக்கும் நீர் வெளியேறும்.
*சின்ன காயங்களுக்கு இலையை அரைத்து பத்து போடலாம்.
*அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்திக்கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.
*அகத்திக் கீரையில் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடித்து, காலை, மாலை பாலில் கலந்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
*தொண்டைப்புண், தொண்டை வலி உள்ளவர்கள் அகத்திக் கீரையை பச்சையாக மென்று சாப்பிடலாம்.
*அகத்திக் கீரை வயிற்றில் உள்ள புழுவை கொல்லும். மலச்சிக்கலை தீர்க்கும்.
*உயர் ரத்த அழுத்தத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர நீரடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.
*அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.
– கவிதா சரவணன், திருச்சி.