திருமலை : சாலையில் திரும்பும்போது அதிவேகமாக வந்த கார் மோதி தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் ஹன்மகொண்டா – கமலாபூர் சாலையில் நேற்று காலை தனியார் பள்ளி சென்றுகொண்டிருந்தது. அப்போது வேன் சாலையில் திரும்பும்போது அதிவேகமாக வந்த கார் பள்ளி வேன் மீது மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்தது. இதைபார்த்து அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேனில் இருந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வேனில் 30 மாணவர்கள் இருந்தனர். இதில் 3 மாணவர்கள் பலத்த காயம் அடைந்ததுடன், காரில் இருந்த மூன்று பேரும் காயமடைந்தனர். வேன் கவிழ்ந்ததும் ஊழியர்கள் எச்சரித்ததால் ஜன்னல் கண்ணாடியை உடைத்தும் எமர்ஜென்சி கதவு திறந்து குழந்தைகளை அப்பகுதி மக்கள் உதவியுடன் காப்பாற்றினர். இந்த விபத்து தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலானது. இந்த வீடியோவை பார்த்தால் அதிவேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.30 மாணவர்களுடன் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.