சிறப்பு மருத்துவ முகாம் : குதிரைகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, உடல் நலத்தை கண்காணிக்கும் கால்நடை மருத்துவர்கள் : தமிழக அரசு ஏற்பாடு

சென்னை : சென்னையில் நடைபெற்ற குதிரைகள் சிறப்பு மருத்துவ முகாமில் குதிரைகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி அவற்றின் உடல்நலத்தை கண்காணிப்பதற்கு தமிழ்நாடு கால்நடை நலவாரியம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை வருவோர் சவாரி செய்வதற்காகவும் திரைப்பட படப்பிடிப்புகள், திருமண ஊர்வலங்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்காகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குதிரைகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் சில குதிரைகளுக்கு உரிய உணவு அளிக்கப்படாததால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், சில குதிரைகள் துன்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் குவிந்தன.

இந்த நிலையில் குதிரை வளர்போரை ஒருங்கிணைத்து குதிரைகளின் நலனை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு கால்நடை நல வாரியம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 129 குதிரைகள் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு குதிரையையும் அடையாளப்படுத்தும் விதமாக அதன் கழுத்தில் ஊசி மூலம் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. குதிரை சவாரி மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தாலும் அவற்றை வளர்ப்பது தான் தங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதாக குதிரை வளர்ப்போர் தெரிவிக்கின்றன.

இதில் மைக்ரோ சிப் பொருத்தி குதிரைகளின் உடல்நலத்தை பேணும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர்.சிறப்பு மருத்துவ முகாமுக்கு கொண்டு வராத குதிரைகளை கண்டுபிடித்து அவற்றிற்கு சிகிச்சை அளித்து மருத்துவ சிப் பொருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று குதிரைகளை பரிசோதிக்கவும் ஆண்டுக்கு 2 முறை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து காண்பிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!