சென்னை: திருவண்ணாமலையில் தீப திருவிழா மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீப திருநாள் 26/11/2023 அன்றும் மற்றும் 27/11/2023 அன்று பௌர்ணமி தினமானதாலும் தீபத்தை காணவும் மற்றும் கிரிவலம் செல்லவும் பல லட்சம் பொது மக்கள் திருவண்ணாமலைக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக திருவண்ணாமலைக்கு தன் சொந்த வாகனங்களில் செல்லும் போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு சொகுசாக பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் 25,26, 27, ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ஐம்பது எண்ணிக்கையிலான குளிர் சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இப்பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் 24 முதல் 26ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் www.tnstc.in மற்றும் tnstc mobile app- மூலம் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தினை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.