சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ளோருக்கான பதவி உயர்வு நேரங்களில் முன்னுரிமை வாய்ப்பை கைவிடும் போது, சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினர் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும். பிரதிநிதித்துவம் குறையும், சமூக நீதி பறிபோகும். ஏற்கனவே பல்வேறு போட்டி தேர்வுகள் மூலம், ஒரு பகுதி உயர்நிலை பணியிடங்கள் நேரடி நியமனம் இல்லாமல் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில் இட ஒதுக்கீடு கொள்கை மூலம் பட்டியலின மற்றும் பழங்குடி மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், உள்ஒதுக்கீடு மூலம் பயன்பெறும் ஆதரவற்ற விதவை, மாற்று திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தமிழ்வழி பயின்றோர் ஆகியோர் தற்போது அனுபவித்து வரும் முன்னுரிமை வாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகும். எனவே, தமிழ்நாடு அரசு பதவி உயர்வுகளில் பின்பற்றப்படும் தற்போதைய நடைமுறை தொடருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றுவது அவசியம் என மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.