திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார். அவருக்கு ரயில்வே ஊழியர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிந்து கூறுகையில், ‘‘எனது சொந்த ஊர் நாகர்கோவில். நான் பி.லிட் தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்தேன். மின்சார பிரிவில் பணியாற்றியபோது ஒரு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். மனம் தளராமல் நன்றாக படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்னை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும்’’ என்றார்.