தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் குழு ஆய்வை தொடங்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒன்றிய அரசின் குழு ஆய்வு மேற்கொள்கிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. பாதிக்கபட்ட பகுதிகள் குறித்து ஒன்றிய குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் காணொலி மோலமாக விளக்கமளித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு பாதிக்கபட்ட பகுதிகளை ஒன்றிய குழுவினர் நேரில் பார்வையிடுகின்றனர்.