கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் ஆல்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் நேற்று சிறுவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு சிறுவனின் கையில் கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. பதற்றம் அடைந்த அவர்கள் அந்த கைத்துப்பாக்கியை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சென்று அந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அது ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதில் குண்டுகள் எதுவும் இல்லை. போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இந்த வகை துப்பாக்கியை பயன்படுத்துவார்கள். அந்த துப்பாக்கியை யார் தென்பெண்ணை ஆற்றில் வீசியது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.