பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு 3ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி 123.08 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று மாலை 5 மணி அளவில், அணை தனது முழுக்கொள்ளவான 126.28 அடியை எட்டியது.
இதையடுத்து உபரிநீர் வராக நதியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள வராக நதி கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து 8 கனஅடியாக உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வராக நதி கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.