ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த மாதம் 31ம் தேதி பதவியில் இருந்து ராஜினாமா செய்த உடனேயே நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய முதல்வராக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் கடந்த 2ம் தேதி பதவி ஏற்றார். இந்தநிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை இன்று கூடியது. ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆற்றிய உரையில்,”எனது கைதுக்கு ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் போக்கே காரணம்.
நான் கைதுசெய்யப்பட்ட ஜனவரி 31, இந்தியாவுக்கே கருப்பு நாள். ஆளுநர் மாளிகையின் சதியே நான் கைதுசெய்யப்பட்டதற்கு காரணம். பழங்குடியினரை ஒன்றிய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது.என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்,”இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் சம்பாய் சோரன்,”ஜனநாயக முறையில் தேர்வான ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது. ஹேமந்த் சோரனுக்கு எப்படி அநீதி இழைக்கப்படுகிறது என்பதை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். ஜார்க்கண்டில் எந்த கிராமத்திற்கு சென்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஹோந்த் திட்டங்களை காணமுடியும்,”இவ்வாறு கூறினார். இதனிடையே ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 80 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், முதலமைச்சர் சாம்பாய் சோரன் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.