பாவூர்சத்திரம் அருகே குடும்ப தகராறில் தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன் கைது

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே குடும்ப தகராறில் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரியப்புரம் அருகே உள்ள எல்லைப்புளி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ஆறுமுகத்தாய் (65). இவர்களுக்கு ஐயப்பன்(48) உள்பட இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன், வடகரை அச்சன்புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இளைய மகன் ஐயப்பன், மனைவி, மகன்களுடன் உள்ளூரில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி இறந்த நிலையில் ஆறுமுகத்தாய் ஐயப்பன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் ஐயப்பனுக்கும், அவரது தாய் ஆறுமுகத்தாய்க்கும் இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஐயப்பன், தாயின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த ஆறுமுகத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், ஆறுமுகத்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர். பெற்ற தாயை மகனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர் பற்றி திடுக்கிடும் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன், அஞ்சலை உட்பட15 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தங்கம் விலையில் மாற்றம் சவரன் மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது