Monday, July 8, 2024
Home » மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலகட்டத்தில், பலவிதமான நோய்கள் மனிதர்களை வேதனைப்படுத்தி வருகிறது. அந்தவகையில், மன அழுத்தம், மனப் பதற்றம் மனக் கவலை என்று இந்த பாதிப்புகள் சத்தமில்லாமல் அதிகம் பேரை பற்றியிருக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது, ஒருகட்டத்தில் உடலில் பல்வேறு நோய்கள் தோற்றுவிக்கவும் காரணமாகிறது. எனவே, மனச்சோர்வு ஏற்படும்போதே அதை தடுத்து மனதை ஆட்கொள்ளவிடாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.

அதிகாலை முடியவில்லை என்றாலும் குறைந்தது 7 மணிக்காவது படுக்கையை விட்டு எழுந்திருங்கள். சிலர் தூக்கத்திலிருந்து எழுந்தாலும் கூட மீண்டும் புரண்டு புரண்டு படுத்தபடி படுக்கையில் கிடப்பார்கள். இதனால் உடல் அசதிக்குள்ளாகவே செய்யும். அதனாலும் மனம் சோர்வாக இருக்கும். இந்த சோர்வு, நாள் முழுக்க எந்த வேலை மீதும் நாட்டமில்லாமல் சோம்பலாக இருக்கச் செய்துவிடும். அதனால் விழிப்பு வந்ததும் படுக்கையை விட்டு எழுந்துவிடுங்கள்.

காலை எழுந்ததும், குறைந்தபட்சம் பத்துமுறையாவது மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதற்கு தனியாக நிபுணரிடம் பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. காற்றோட்டமான இடத்தில் வீட்டின் மொட்டை மாடியில், தோட்டத்தில் விரிப்பை போட்டு அமர்ந்து மூச்சை ஆழமாக இழுத்து பொறுமையாக விடுங்கள். சுத்தமான பிராணவாயுவால் உடல் மனம் இரண்டும் ஆரோக்கியம் அடைகிறது. மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு கிடைக்கிறது. அப்படியே மிதமான நடைப்பயிற்சியும் செய்வது நன்மை அளிக்கும். இதற்காக குறைந்தது 20 நிமிடங்களாவது நேரம் ஒதுக்குங்கள்.

இது எல்லா வயதினருக்கும் பலன் கொடுக்கும். ஐந்து நிமிடங்கள் எதையும் செய்யாமல் மனைத ஒருமுகப்படுத்தி தியானம் செய்யலாம். இந்த நேரத்தில் மனதை அலைபாயவிடாமல் எந்த பிரச்னைகளையும் சிந்திக்காமல் மனதை அமைதியாக்க பழகுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் சில நாட்களில் மனம் உங்கள் கட்டுக்குள் வந்துவிடும். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிப்பதை உணர முடியும்.

மனதில் சோர்வு இருந்தாலே பசியின்மை பிரச்னை இருக்கதான் செய்யும். ஆனால் பசி இல்லையென்றாலும் மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு உணவை எடுத்துக் கொள்வது அவசியம். உணவு எடுக்கணுமே என்று எதையாவது கொறிக்காமல் சத்தான உணவை எடுத்துக் கொள்வதும் முக்கியம். குறிப்பாக எதிர்ப்புசக்தி தரும் உணவை கூடுதலாக உணவில் சேர்த்துவர வேண்டும். உண்ணும்போது கண்கள் உணவை மட்டுமே பார்க்க வேண்டும். மனதிலும் உணவின் சுவை மட்டுமே நிரம்பியிருக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் உணவை நேரம் தள்ளி எடுக்க வேண்டாம்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீர் மட்டும்தான் தேவை என்றில்லை. சத்து நிறைந்த பழச்சாறுகளையும் எடுத்து கொள்ளலாம். உரிய இடைவேளையில் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளும்போது சோர்விலிருக்கும் மூளையை தட்டி எழுப்பி உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனால் மனச் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவதோடு இளமையாகவும் அழகாகவும் இருக்க உதவும்.

குடும்பம், குழந்தைகள், பொறுப்புகள் தாண்டி தற்போது பணிக்குச் செல்லும் பெண்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் தமக்கென்று பிடித்த விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்கிக் கொள்ள முடிவதில்லை. எப்போதும் வேலை என்று ஓடிக்கொண்டிருந்தால் மூளையும் மனமும் ஓயாமல் சிந்தித்து சிந்தித்து அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால் தினசரி அரைமணி நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். அதில் கைவேலையோ, பாட்டு கேட்பதோ, புத்தகங்கள் படிப்பதோ உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்யுங்கள். அது உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.

குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவர் புத்தகத்திலும், மற்றொருவர் கணினி அல்லது லேப் டாப்பிலும் மூழ்கியிருக்கும் நிலைதான் இன்று அதிகம் இருக்கிறது. அதனால், வேலைகள் முடிந்ததும் குறைந்தது அரைமணி நேரமாவது குடும்பத்தாரோடு அமர்ந்து பிடித்த விஷயங்களையும், நடந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன்மூலம் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் பல விஷயங்களும் தளர்ந்து இலேசாகக் கூடும்.

வரிசைகட்டி நிற்கும் வீட்டு வேலையாக இருந்தாலும், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களாக இருந்தாலும் அதை முழுமையாக செய்யப்போவது நீங்கள் தான் என்பதால் இதில் சுணக்கம் காண்பிக்க வேண்டாம். அதனால் வேலையைத் திட்டமிடுங்கள். உங்களுக்கு சலிப்பும் வெறுப்பும் தரும் வேலையை எப்போதும் ஒதுக்கி வைக்காதீர்கள். இவை தள்ளிப்போக போக மனதில் அழுத்தம் தான் அதிகரிக்கும். மாறாக முதல் வேலையாக அதை எடுத்து முடித்துவிடுங்கள். இதனால் அடுத்தடுத்த வேலையையும் சுலபமாக முடிப்பீர்கள்.

விடுமுறை நாளாக இருந்தாலும் வேலை நாளாக இருந்தாலும் தினமும் இரவு தூங்கும் நேரத்தை சரியாக பின்பற்றுங்கள். உறங்குவதற்கு முன்பு ஒரு குட்டிக் குளியல் போடுவதும் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும். தூக்கம் வரவில்லை என்று ஃபோனிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கி இருப்பதால் மறுநாள் வேலையில் ஈடுபட முடியாமல் மனமும் உடலும் சோர்வை சந்திக்கவே செய்யும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையில் இருங்கள். தூக்கம் வரும் வரை பிடித்த புத்தகத்தை படியுங்கள். வெளிச்சம் தடையாக இருந்தால் மிதமான இசையைக் கேட்டுக் கொண்டிருந்தால் தூக்கம், விரைவில் வரக்கூடும்.

தொகுப்பு: ஸ்ரீ

You may also like

Leave a Comment

17 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi