ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் அருகே தனியார் கல்குவாரி கிரஷர் கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய பெண் ஊழியர் பரிதாபமாக பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே எருமையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி கிரஷர் செயல்படுகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி கோமதி (35) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கோமதி நேற்று வழக்கம்போல பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, கிரஷரில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் இருந்த எம்.சாண்ட் மண்ணை கைகளால் அகற்றியபோது, கன்வேயர் சிக்கி கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, கோமதிக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சோமங்கலம் போலீசார், கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.